tamilnadu

img

மின்கம்பம் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலி

ஹைதராபாத்,
ஆந்திர மாநிலத்தில் மின்கம்பத்தின் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் சின்டப்பள்ளி அருகே உள்ள பலப்பம் கிராமத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள கோடுகோண்டா காய்கறி சந்தைக்கு சென்றனர். காய்கறிகளை வாங்கிக் கொண்டு திரும்பும் போது அனைவரும் ஒரே ஆட்டோவில் ஏறி சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின்கம்பத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் மின் கம்பம் சரிந்து ஆட்டோவின் மீது விழுந்தது. அப்போது ஆட்டோவின் மீது  மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 
மேலும் 6 பேர் தீக்காயங்களுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.